மஹிந்தவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம்!- கண்டியில் சம்பிக்க சூளுரை
மஹிந்த ராஜபக்சவை ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி நிரந்தரமாக அரசியலிலிருந்து விரட்டுவோம். அவரை மீண்டும் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம் என்பதனை உறு...


மஹிந்த ராஜபக்சவை ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி நிரந்தரமாக அரசியலிலிருந்து விரட்டுவோம். அவரை மீண்டும் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம் என்பதனை உறுதியாக கூறுகின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் இந்த முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சம்பிக்க ரணவக்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மஹிந்த ராஜபக்சவை ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி நிரந்தரமாக அரசியலிலிருந்து விரட்டுவோம்.
தோல்வியடையும் போராட்டங்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம். எனவே ஒரு முறை மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோம். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார். எனவே அவரை மீண்டும் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம் என்பதனை உறுதியாக கூறுகின்றோம்.
கடந்த 2005ம் ஆண்டு மஹிந்த தனித்து இருந்தார். நாங்கள் அவரை பதவிக்கு கொண்டு வந்தோம்.
அக்காலத்தில் யுத்தம் செய்ய முதுகு பலமில்லாமல் புலிகளுக்கு காசு கொடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் மாவிலாறு விடயததில் தலையிட்டு யுத்தத்தை நடத்த ஊக்குவித்தோம்.
எனவே எம்மால் இதனை செய்ய முடியும். எனவே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புவோம். மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் வீதியமைத்தலில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது. அனைத்து விடயங்களிலும் டீல் போடப்பட்டது.
100 நாட்களில் என்ன செய்தீர்கள் என்று கேட்கின்றனர். எத்தனையோ செயற்பாடுகளை நாங்கள் 100 நாட்களில் செய்தோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் காணப்படும் அதிகாரங்களை குறைத்துள்ளோம். இது வரலாற்று ரீதியான விடயமாகும்.
தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளோம். அதனால்தான் வேட்பு மனுத்தாக்கலின் பின்னர் ஊர்வலஙகள் செல்லவில்லை. இன்று சுயாதீன நீதித்துறை காணப்பட்டது.
திருடர்களை ஏன் பிடிக்கவில்லை என்று கேட்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி புதிய அரசாங்கம் அமைந்ததும் திருடர்களை பிடிக்க ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவை நியமிப்போம். இதற்கு பிரதமரும் இணங்கியுள்ளார்.
பஷில் ராஜபக்ச வைத்தியசாலையில் இருந்தது போன்று இல்லாமல் திருடர்களை நாங்கள் பிடிப்போம்.
விரைவில் மன்னார் படுக்கையில் எரிவாயுவை எடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இதனை மஹிந்த காலத்தில் செய்திருக்கலாம். ஆனால் அவரின் காலத்தில் டீல் போடப்பட்டது. ஆனால் எமது ஆட்சியில் அவ்வாறு நடக்காது.
எனவே மஹிந்தவை ஆகஸ்ட் மாதம் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம்.