'மஹிந்த பயம்' வெறும் மாயை - ரில்வின் சில்வா
பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்ட தாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றம் வந்தாலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்...


பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்ட தாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றம் வந்தாலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் ஜே.வி.பி., தேர்தலில் “மஹிந்த” அச்சம் வெறும் மாயையே என்றும் தெரிவித்தது.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
பொலிஸ் மா அதிபராக பதவி வகித்தவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கீழ் மட்டத்திற்கு வந்தது போன்று மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்துவிட்டு கீழ் நிலைக்கு இன்று இறங்கி வந்துள்ளார். அந்தளவுக்கு அரசியல் பதவி பேராசை அவரை ஆட்கொண்டுள்ளது.
ஜனாதிபதியாக ஆட்சி வகித்த காலத்தில் மகிந்த பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.எனவே அவர் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானாலும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் ஓய்வுபெற்ற பின்னர் அரசியலுக்கு வரவில்லை.
எனவே முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பான சிறப்புரிமைகள் பாதுகாப்பு உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரச்சினை எழவில்லை.ஆனால் மஹிந்த அரசியலுக்குள் புகுந்து புதுப்பிரச்சினையை உருவாக்கியுள்ளார்.
இவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகள் வழங்கப்படுவதென்பது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கும் செயலாகும்.அத்தோடு இந்தப் பொதுத் தேர்தலில் “மஹிந்த” பயம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது வெறும் மாயையாகும். எதற்கும் மக்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.