சிலரின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக மஹிந்த தேர்தலில் போட்டியிடக்கூடாது! பசில் எச்சரிக்கை
நாட்டின் நிலைமைகளை ஆராய்ந்து மிகவும் கவனத்துடனே மஹிந்த தேர்தலில் களமிறங்க வேண்டும் என அவரின் தம்பியும் முன்னாள் அமைச்சருமான பசில் ...


யாருடைய தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் மஹிந்த தேர்தலில் களமிறங்கினால் அது அவரையே பாதிக்கும். யார் என்ன சொன்னாலும் மக்கள் இன்றும் மஹிந்தவின் பக்கமே உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக களமிறக்கப் படவேண்டும் என்ற கருத்து மஹிந்த ஆதரவுக் கூட்டணியால் முன்வைக்கப்பட்டு வரும் நிலைமையில் அவர் களமிறங்கும் சாத்தியம் உள்ளதா? என்பது தொடர்பில் வினவிய போதே முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நான் அறிவேன். மக்களும் அவரை மீண்டும் அரசியலுக்கு அழைக்கின்றனர் என்பதும் எமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வருவது தொடர்பில் என்னால் ஒரு நிலைப்பாட்டில் கருத்து தெரிவிக்க முடியாது.
மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் அந்த வேலைத்திட்டத்தில் மஹிந்த எனக்கும் அழைப்பு விடுத்தால் நான் அந்த காரியத்தில் என்னையும் இணைத்துக்கொள்வேன்.
ஆனால் என்னைப்பொறுத்த வரையிலும் மஹிந்த மிகவும் கவனத்துடன் நிலைமைகளை ஆராய்ந்து களத்தில் இறங்க வேண்டும். யாருடைய தனிப்பட்ட நோக்கமும் இதன் பின்னணியில் இருக்குமானால் அது மஹிந்தவையே பாதிக்கும் என்பதை அவர் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மக்கள் எப்போதும் அவர் பக்கம் உள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல் தீர்மானங்களும் மக்களை பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
இன்று நடைமுறையில் இருக்கும் அரசாங்கம் மிகவும் நகைப்புக்குரியதாக மாறியுள்ளது.
பெரும்பான்மை ஆதரவு எதிர்க்கட்சி பக்கம் இருக்கையில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத அரசாங்கம் ஆட்சி நடத்துகின்றது. ஒரு சிலரின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் முழு நாட்டையும் பாதாளத்தில் தள்ளியுள்ளனர். உலகில் எந்த நாட்டிலும் இவ்வாறானதொரு ஆட்சி நடக்கவில்லை.
ஒரு ஆட்சி எவ்வாறு அமையக் கூடாது என்பதற்கு உலக நாடுகள் அனைத்துக்கும் இலங்கை நல்லதொரு உதாரணமாகும்.
எமக்கு தோல்வி என்பது புதிதல்ல. ஆனால் இன்று நாட்டில் பலமான எதிர்க்கட்சி இல்லாமல் போயுள்ளமையே எமக்கு மிகப்பெரிய தோல்வியாக மாறியுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 62 இலட்சம் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமே. ஆனால் 58 இலட்சம் மக்கள் இந்த அரசாங்கத்தை எதிர்த்துள்ளனர். அந்த மக்கள் இன்று அனாதரவாகிவிட்டனர். அந்த மக்களை இந்த அரசாங்கம் பழிவாங்கி வருகின்றது.
யாரை ஆதரிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களின் தனிப்பட்ட விருப்பாகும். ஜனாதிபதித் தேர்தலில் 58 இலஞ்சம் மக்கள் மஹிந்தவை ஆதரித்தமை மக்களின் தவறு அல்ல. அது மக்களின் விருப்பமாகும். ஆகவே அதை இந்த அரசாங்கம் பழிவாங்கும் நோக்கத்தில் கையாளக் கூடாது.
அவ்வாறு செயற்படுவது மீண்டும் இந்த நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும். ஆட்சி மாறலாம் தலைமைத்துவம் கைமாறலாம். ஆனால் வென்றெடுத்த நாட்டின் விடுதலை மீண்டும் சிதைவடைந்துவிடக் கூடாது என்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் பசில் மேலும் தெரிவித்துள்ளார்.