பிரித்தானிய பெற்றோர்களுக்கு ஓர் நற்செய்தி: புதிய திட்டத்தை அறிவிக்கிறார் கேமரூன்
பிரித்தானிய பெற்றோர்களின் குழந்தைகளை சிறந்த முறையில் பராமரிப்பதற்காக இலவச திட்டங்களை பிரதமர் கேமரூன் அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்...

பிரித்தானியாவில் உள்ள பெற்றோர்களின் 3 மற்றும் 4 வயதான குழந்தைகளை வாரத்தில் 15 மணி நேரங்கள் இலவசமாக பராமரிப்பதற்காக அரசே செலவுகளை ஏற்று வருகிறது.
தற்போது பணிக்கு செல்லும் பெற்றோர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக உருவாக்க பிரதமர் கேமரூன் திட்டமிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள ‘குழந்தைகள் பராமரிப்பு மையத்தில்’(Childcare) வாரத்திற்கு 15 மணி நேரங்கள் இலவசமாக பராமரிப்பு செய்துவருவதை 30 மணி நேரங்களாக அதிகரிக்க உள்ளதாக பிரதமர் திட்டம் வகுத்துள்ளார்.
இந்த 30 மணி நேரத்திற்கு உண்டான பராமரிப்பு செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும். இதன் மூலம் 3 மற்றும் 4 வயதுடைய குழந்தைகளை அதிக கவனத்துடன், சிறந்த முறையில் பராமரிக்க முடியும்.
எனினும், பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் குழந்தையின் தாயார்களுக்கு இந்த புதிய திட்டம் பொருந்தாது.
பணிக்கு செல்லும் பெற்றோர்கள், தாய் அல்லது தந்தை மட்டும் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் இந்த புதிய இலவச திட்டம் பொருந்தும்.
வருடத்திற்கு சுமார் 5 ஆயிரம் பவுண்டுகள் செலவாகும் இந்த புதிய கூடுதல் இலவச திட்டத்தால் 6 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள் என பிரதமர் கேமரூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கூடுதல் இலவச சலுகையை குறித்து பேசிய பிரதமர் கேமரூன், தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், பணிக்கு செல்லும் பெற்றோர்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில் செயல்படுவது தான் என்றார்.
பிரதமரின் கூடுதல் இலவச சலுகை குறித்து பேசிய வேலைவாய்ப்பு துறை அமைச்சரான பிரீத்தி பட்டீல், குழந்தைகளின் நலத்திற்காக எந்த அரசாங்கமும் செய்ய முடியாத திட்டங்களை ஆளுங்கட்சி செயல்படுத்தி வருவதாக புகழ்ந்துள்ளார்.
எனினும், வாரத்திற்கு 30 மணி நேரங்களுக்கு கூடுதலாக பராமரிப்பு சேவைகளை எதிர்ப்பார்க்கும் பெற்றோர்களிடம் பிற குழந்தைகள் பராமரக்கும் மையங்கள் அதிக கட்டணம் வசூலிக்க நேரும் அபாயம் உள்ளதாகவும் சிலர் இந்த திட்டத்திற்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர்.
பிரித்தானிய பெற்றோர்களுக்கு பயனளிக்கும் இந்த புதிய கூடுதல் இலவச திட்டங்கள் எதிர்வரும் 2016ம் ஆண்டு தொடக்கம் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அரசு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
