அப்துல் கலாமின் ஜனாஸா நேற்று நல்லடக்கம்
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஜனாஸா பூரண அரச மரியாதையுடன் ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு எனும் இடத்தில் நேற்றுக் காலை நல்...



அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்,
முன்னதாக, மோடியும், ராகுலும் டெல்லியில் இருந்து தனித்தனியாக மதுரைக்கு விமானம் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ராகுல் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடி, மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நேற்றுக் காலை அப்துல் கலாமின் ஜனாஸா பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு குடும்பத்தினர் சார்பில் தொழுகை நடத்தப்பட்டது. தொழுகைக்குப் பின்னர் கலாம் உடல் நல்லடக்கத்துக்காக பேக்கரும்பு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
வழிநெடுகிலும் பொதுமக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அப்துல் கலாம் உடலுக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
அப்துல் கலாம், கடந்த 27 ஆம் திகதி ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார்.
தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் கலாம் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.