ஒபாமாவுடன் புதின் திடீர் தொலைபேசி பேச்சு!!!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை ரஷிய அதிபர் புதின் திடீரென தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இரு தலைவர்களும் ஈரான், சிரியா, உக்ரைன் பிரச்சினைகள் ...

பனிப்போர்
உக்ரைன் விவகாரத்தில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதைத் தொடர்ந்து ரஷியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.
இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இரு தலைவர்களும் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பின்னர் பேசிக்கொள்ளவில்லை.
திடீர் அழைப்பு
இந்த நிலையில் ஒபாமாவை நேற்று புதின் திடீரென தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
அப்போது அவர்கள், சிரியாவில் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும் முன்னேறி வருவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர். ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவது தொடர்பாக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
ஈரான் அணு ஆயுதப் பேச்சு
மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் நிலவரம் பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டனர். ஈரான் அணு ஆயுதப்பேச்சு வார்த்தை தொடர்பாகவும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
முதல் முறையாக மத்திய ஐரோப்பா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா கனரக ஆயுதங்களை பயன்படுத்தப் போவதாக புதினிடம் ஒபாமா கூறினார்.
உக்ரைனில் இருந்து ரஷிய துருப்புகள் வாபஸ்
மின்ஸ்க் உடன்படிக்கையின் கீழ் அளித்துள்ள வாக்குறுதிகளை மதித்து, ரஷியா தனது துருப்புகளையும், ஆயுதங்களையும், தளவாடங்களையும் உக்ரைன் பகுதியில் இருந்து முழுமையாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று புதினிடம் ஒபாமா வலியுறுத்தினார்.
இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘சிரியாவில் பெருகி வரும் ஆபத்தான நிலைமை, ஈரான் புதிதாக அணு ஆயுதங்களை கொள்முதல் செய்யாமல் தடுப்பதற்காக ‘வல்லரசு நாடுகள் பிளஸ் 1’ (இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, அமெரிக்கா) ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதின் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் பேசினர்’’ என கூறப்பட்டுள்ளது.