டி20 உலகக்கிண்ணப் போட்டிகள் இடம்பெறும் நகரங்கள் அறிவிக்கப்பட்டன
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு...


இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் எட்டு நகரங்களில் இடம்பெறும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
டி20 இறுதிப் போட்டி கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவைத் தவிர சென்னை, பெங்களூர், தரம்சாலா, மொஹாலி, மும்பை, நாக்பூர் மற்றும் புதுடில்லியிலுள்ள விளயாட்டு மைதானங்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
எனினும், அந்த எட்டு இடங்களிலுமுள்ள விளையாட்டு அரங்குகள் சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவை நிர்ணயித்துள்ள தரம் மற்றும் வசதிகள் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் சபையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
டி-20 உலகக்கிண்ண தொடருக்கான போட்டிகள் எங்கெங்கு நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து, அந்தப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் துவங்கப்பட்டுள்ளன என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அந்த டி20 உலகக்கிண்ண போட்டியில், ஆடவர் மற்றும் மகளிருக்கான போட்டிகள் ஒரே சமயத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.