ஊடகங்கள் மீது பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க குற்றச்சாட்டு! - பெயர் குறிப்பிட்டு தாக்கினார்.
மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்து வருகின்றனர் என்பது போல சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதாக நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டி...


மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்து வருகின்றனர் என்பது போல சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதாக நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, அந்த ஊடகங்களின் பெயர்களையும் பகிரங்கமாக குறிப்பிட்டார். பிணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர், டெய்லிமிரர், சண்டேலீடர் மற்றும் மகராஜ நிறுவனத்தின் தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்
குறிப்பிட்ட பிணை விவகாரம் தொடர்பாக மத்திய வங்கி ஆளுநர் பதவிவிலக வேண்டும் என செய்திவெளியிட்டதற்காக அவர் டெய்லிமிரரை சாடியுள்ளார். சண்டே லீடரின் உரிமையாளர்களுக்கு பத்திரிகை நடத்துவதற்கான பணம் எங்கிருந்து வந்தது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். சில தனியார் ஊடக உரிமையாளர்கள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் நன்மைகளை அனுபவித்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று தனக்கு எதிராக பிரசாரமொன்றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், நாங்கள் மகாராஜாக்களை செவிமடுக்க மாட்டோம், பொதுமக்களை செவிமடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். சில அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது தானும் சில அரசியல்வாதிகளும் தேவதைகள் போன்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.