இந்தியாவிற்கு ஆப்பு வைத்த இலங்கை அரசு
கொழும்பு துறைமுக நகர திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் இ...


கொழும்பு துறைமுக நகர திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் இந்திய வட்டாரங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல்படுத்த இலங்கை சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
எனினும் கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று புதிய அரசு பதவியேற்றவுடன் இத்திட்டம் மறுஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொழும்பு நகர துறைமுக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடலில் மணல் நிரப்பி நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர பணிகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வு முடிவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே துறைமுக நகர திட்டத்தை தொடர சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் காணப்படும் சில குறைபாடுகள் களையப்படும். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் சீனா செல்கிறார் என குறிப்பிட்டார்.
ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வந்தநிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இலங்கையின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படும் என்று இந்திய தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக கொழும்பு துறைமுக நகர திட்டத்தை செயல்படுத்த சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது இந்திய வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.