ISIS இற்கு எதிராக ஈராக்கியப் படைகள் பாரிய படை நடவடிக்கை முன்னெடுப்பு!
ஈராக்கின் சலஹுட்டின் மாகாணத்தில் ISIS போராளிகளுக்கு எதிராக ஈராக்கியப் பாதுகாப்புப் படையினர் பாரியளவிலான படை நடவடிக்கையை முன்னெடுத்திருப்பத...


ஈராக்கின் சலஹுட்டின் மாகாணத்தில் ISIS போராளிகளுக்கு எதிராக ஈராக்கியப் பாதுகாப்புப் படையினர் பாரியளவிலான படை நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாக இன்று திங்கட்கிழமை அந்நாட்டின் பாதுகாப்புத் தரப்பில் இருந்து அறிவிக்கப் பட்டுள்ளது.
மத்திய வடக்கு ஈராக்கில் ISIS போராளிகள் வமுள்ள முக்கிய நகரங்களை மீளக் கைப்பற்றும் நோக்கில் இப்படை நடவடிக்கை அமைந்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதில் சுன்னி மற்றும் ஷியா பிரிவு போராளிகளின் ஆதரவுடன் சுமார் 30 000 இற்கும் அதிகமான ஈராக் துருப்புக்களும், போலிசாரும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பக்தாத்துக்கு வடக்கே 170 Km தொலைவிலும் இரு வழிகளிலும் டிக்ரிட்டுக்கு வடக்கே இரு வழிகளிலும் ஸ்பெயிக்கெர் விமானத் தளத்தில் இருந்து ஒரு வழியாகவும் சுமார் 5 மார்க்கங்களினூடாக இந்தப் படை நடவடிக்கை ஆயுதம் தரித்த கவச வாகனங்கள் மற்றும் விமானத் தாக்குதலின் உதவியுடன் முன்னெடுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் பக்தாத்துக்கு வடக்கே 120 Km தொலைவில் சமர்ரா பகுதியில் இருந்து கடும் சமருக்குப் பின் ISIS வசம் இருந்த பல கிராமங்கள் கைப்பற்றப் பட்டிருப்பதாகவும் டிக்ரிட்டினை விடுவிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற் கொள்ளப் பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படை நடவடிக்கைக்கு சில நாட்கள் முன்னர் குறித்த இந்நகர்ப் பகுதிகளிலும் கிராமங்களிலும் மிகத் தீவிர ஷெல் வீச்சு மேற்கொள்ளப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி வடக்கு சிரிய மாகாணமான அல் ஹசக்காவிலுள்ள கிராமங்களில் இருந்து ISIS இனால் கடத்தப் பட்ட சுமார் 220 அஸ்ஸிரியன் கிறித்தவர்களில் 19 பேர் வடக்கு சிரியாவில் விடுவிக்கப் பட்டிருப்பதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் கடத்தப் பட்ட இந்த 220 கிறித்தவர்களிலும் வெறும் 19 பேரை மாத்திரம் ISIS விடுவித்தமைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மறுபுறம் தம்மை ISIS இன் ஆதரவாளர்கள் என சுயமாகத் தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சிலர் டுவிட்டரின் ஸ்தாபகரான ஜேக் டோர்சே மற்றும் ஏனைய டுவிட்டர் ஊழியர்கள், ISIS இனை ஊக்குவிக்கும் கணக்குகளை மூடுவதைத் தொடர்ந்து மேற்கொண்டால் அவர்களைக் கொலை செய்வோம் என ஆன்லைனில் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.