பண்டாரநாயக்கவை பிக்குமார்கள் சிலரும் அமைச்சர்களும் இணைந்தே கொலை செய்தார்கள் -ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இளம் தலைவர்கள தமது பொறுப்புகளை ஏற்று செயற்படுகின்றனர். எதிர்காலத்தில் ஸ்ரீ...


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இளம் தலைவர்கள தமது பொறுப்புகளை ஏற்று செயற்படுகின்றனர். எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளம் தலைவர்களில் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாக வாழ்த்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்டு 5 வருடங்களுக்குள் அந்தக் கட்சியை ஆட்சிபீடமேற்றிய எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவை கொலை செய்யுமளவிற்கு அன்றிருந்த அமைச்சர்கள் கீழ்த்தரமான அரசியல் செய்தனர். பண்டாரநாயக்கவை ஐ. தே. க. வோ புலிகளோ அன்றி சுதந்திரக் கட்சியினரே கொன்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மேலும் கூறியதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் பிரிவை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய நாள் இன்றாகும்.
மிகவும் கஷ்டமான சூழலிலேயே நாம் கட்சியை கட்டியெழுப்பினோம். சு. க. இளைஞர் முன்னணி தலைவராக நான் 12 வருடங்கள் பணியாற்றினேன். அன்று கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவிட்டு வீடு செல்ல நேரமில்லாமல் இங்கு மேசை மேல் தூங்கியிருக்கின்றேன்.
பண்டாரநாயக்கவைப் போன்று பல்வேறு பிரச்சினைகளுக்கும், அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்த வேறு தலைவர் இருக்க முடியாது. அவரை சு.க. வில் இருந்த பிக்குமார்கள் சிலரும் கெபினட் அமைச்சர்களும் இணைந்தே கொலை செய்தார்கள். கட்சி தலைவரை கொலை செய்யுமளவிற்கு இவர்கள் குருரமானார்கள் என்றார்.
இங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் முன்னணி தலைவர் சாந்த பண்டார கூறியதாவது,
கட்சி இளைஞர் முன்னணியை பலப்படுத்தி புதிய பாதையில் செல்ல எதிர்பார்க்கிறோம். நிர்வாகம், நிதி, கல்வி, ஆய்வு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய 5 துறைகளினூடாக எமது பிரிவை பலப்படுத்த இருக்கிறோம். சு. க. பணிகளை கிராம மட்டத்திற்கு கொண்டு செல்ல 2 வார காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கட்சி செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.