சிரியாவின் அதிபர் அசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்!:ஜோன் கெர்ரி
அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளரான ஜோன் கெர்ரி சமீபத்தில் சிரியாவில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அந்நாட்டு அதிபர் பஷார் அல்...


இது குறித்து CBS செய்தி ஊடகத்துக்கு கெர்ரி அளித்த நேர்காணலில் 4 வருடமாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் அரபு தேசமான சிரியாவில் ஓர் மாற்றத்தைக் கொண்டு வரும் மூலோபாயத்துக்காக அசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழுத்தம் தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் இந்த மேலதிகமான அழுத்தமானது எந்த வகையிலானது என்பதைக் கெர்ரி குறிப்பிடவில்லை என்பதுடன் கெர்ரியின் இக்கருத்துக்கு சிரிய உள்நாட்டு ஊடகங்கள் உடனடியாக இதுவரை பதில் அளிக்கவில்லை. ஏற்கனவே ஜனவரியில் சிரிய அரச பிரதிநிதிகள் மாஸ்கோவில் நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில் எதிரணியினருடன் இணைந்து பங்கேற்றிருந்த போதும் இதனை மேற்குலக ஆதரவுடன் போராடி வரும் முக்கிய எதிரணி தவிர்த்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 4 வருடமாக நீடிக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் 220 000 இற்கும் அதிகமான உயிர்கள் பலியாகியுள்ளதுடன் சிரிய சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இடம் பெயர்ந்தும் உள்ளனர். மேலும் சிரிய நிலப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியையும் ஈராக்கில் பல பகுதிகளையும் கைப்பற்றிய ISIS போராளிகள் சுயமாகப் பிரகடனம் செய்த கலிஃபாவுடன் தொடர்ந்து ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்துத் தரப்பினரும் இராணுவ ரீதியாகத் தீர்வைப் பெற முடியாது என்பதிலும் அரசியல் தீர்வே சாத்தியம் என்பதிலும் சம்மதித்துள்ள போதும் அனைவரும் பேச்சுவார்த்தைக்கு முன் வந்து தீர்வைப் பெற முயற்சிப்பது முக்கியம் என கெர்ரி தெரிவித்துள்ளார். எகிப்தில் ஈரானுடனான அணுசக்திப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கும் முயற்சியில் வந்திருந்த போதே CBS ஊடகத்துக்கு இக்கருத்துக்களை கெர்ரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.