சரத் பொன்சேகாவுக்கு வாழ்நாள் முழுவதும் அமைச்சரவை அதிகாரங்கள்
ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவிக்கு நியமித்து, அவருக்கு நாட்டின் நாட்டின் அதியுயர் பீடமான நாடாளு...


இலங்கை இரண்டாக பிளவுபடுவதை தடுத்து நாட்டை பாதுகாக்க சரத் பொன்சேகா தலைமைத்துவத்தை வழங்கினார். மூன்று முறை அவர் தாக்குதலுக்கு உள்ளானார்.
இதனை பொருட்படுத்தாது நாட்டை காக்க அர்ப்பணிப்புக்களை செய்த சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவியை வழங்குவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பீல்ட் மார்ஷல் என்ற பதவி ஜெனரல் பதவிக்கும் மேலானது. 5 நட்சத்திரங்களை கொண்ட ஜெனரல் பதவிக்கு நிகரானது. பீல்ட் மார்ஷல் என்ற பதவியை வகிப்பவர் ஒய்வுபெறாது தொடர்ந்தும் சேவையில் இருப்பவராக கருதப்படுவார்.
இது கௌரவ பதவி என்றும் பீல்ட் மார்ஷல், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் பொறுப்பு வகிக்க மாட்டார்.
அத்துடன் பீல்ட் மார்ஷல் என்ற பதவியை வகிப்பவர் இராணுவ சட்டத்திற்கு உட்பட்ட அதிகாரி அல்ல.
பீல்ட் மார்ஷல் ஒருவர் நாட்டில் உள்ள சகல பிரஜைகளுக்கும் இருக்கும் உரிமைகளை கொண்டிருப்பார். ஜனநாயக ரீதியிலான அரசியலில் ஈடுபட அவருக்கு சுதந்திரம் உள்ளது.
அத்துடன் ராஜதந்திர முறைக்குள் அவர் நாட்டின் அதியுயர் பீடமான நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு ஈடான அந்தஸ்தை கொண்டிருப்பார்.
பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்படும் சரத் பொன்சேகாவுக்கு 4 அதிகாரிகள் அடங்கலாக, 150 படையினரின் பாதுகாப்பு வழங்கப்படும். வாழ்நாள் முழுவதும் சம்பளம் வழங்கப்படும். வாழ்நாள் முழுவதற்குமான செயலகம் ஒன்று வழங்கப்படுவதுடன் ஊழியர்களும் வழங்கப்படுவார்கள்.
பீல்ட் மார்ஷல் ஒருவர் உயிரிழந்தால், இராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடத்தப்படுவதுடன் 21 மரியாதை பீரங்கி வேட்டுகளும் தீர்க்கப்படும்.
இதனை தவிர உத்தியோகபூர்வ வாசஸ்தலம், இராணுவ உயரதிகாரிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்து வசதிகள் என்பனவும் பொன்சேகாவுக்கு வழங்கப்பட உள்ளது.
பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவர் இறக்கும் பட்சத்தில் அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் கொடுப்பனவும் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.