இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நடத்திய விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நடத்திய விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் குறிப்பிட்ட காலப்பகுதியில் இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய கடந்த வருடம் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மனித உரிமை பேரவையிலும், பாதுகாப்புச் சபையும் வழங்கிய ஆணையின் படி இலங்கை உட்பட ஐந்து நாடுகள் குறித்து விசாரணைகள் நடைபெற்றன.
இதன்படி சர்வதேச விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.இந்த அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவுள்ள பேரவை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு இலங்கை விசாரணைகள் குறித்த அறிக்கையும் வெளியாகவுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.