மைத்திரி - ரணில் - சந்திரிகா மந்திராலோசனை
சிறிலங்காவில் அரசியல் நெருக்கடி நிலை குறித்து முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகளுடன் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் மந்திராலோசனை நடத்தியுள்ளனர...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_20.html

சிறிலங்காவில் அரசியல் நெருக்கடி நிலை குறித்து முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகளுடன் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் மந்திராலோசனை நடத்தியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில், சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது பாராளுமன்றத்தை விரைவில் கலைத்து தேர்தலை நடத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
தேர்தல் முறை மாற்ற யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டு பாராளுமன்றத்தை கலைப்பதா? அல்லது தேர்தல் முறையை மாற்றாமல் பாராளுமன்றத்தை கலைப்பதா என்பது தொடர்பாகவே மூவரும் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
எவ்வாறெனினும் தேர்தல் முறை மாற்றத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்கு செல்வதற்கே நேற்றைய கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமாக தேர்தல் முறை மாற்ற யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமலேயே பாராளுமன்றத்தை கலைத்துவிடுவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் தேர்தல் இன்று அல்லது நாளை பாராளுமன்றம் கலைக்கப்படுமிடத்து ஜூலை மாத நடுப்பகுதியில் பாராளுமன்றம் தேர்தல் நடைபெறும்.
நேற்றைய தினமும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீண்டநேரம் ஜனாதிபதி செயலகத்திலும் ஆராய்ந்துள்ளார். அதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் கலந்துகொண்டுள்ளார்.
இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும், சுதந்திரக் கட்சியின் மஹிந்த ஆதரவு அணியும் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றன.
ஆனால் சுதந்திரக் கட்சியானது தேர்தல் முறையை மாற்றிவிட்டே தேர்தலுக்கு செல்லவேண்டும் என்று கூறிவருகின்றது. இந்நிலையில் சில தினங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.