விமானத்தின் இறுதி நிமிடங்கள்… அலறிய பயணிகள், பதறாத துணை விமானி, கதவை பலமாக தட்டிய தலைமை விமானி : துணை விமானி சதி :பரபரப்பு தகவல்
150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் துணை விமானியால் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளத...


அவர்களில் 72 பேர் ஜெர்மானியர்கள், 51 பேர் ஸ்பெயின் நாட்டினர், 3 பேர் அமெரிக்கர்கள். இங்கிலாந்து, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கொலம்பியா, டென்மார்க், இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, ஈரான், நெதர்லாந்து, மொராக்கோ நாட்டினரும் பலியானவர்களில் அடங்குவர்.
கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும் விமானத்தின் சிதைவுகளையும், பலியானவர்களின் உடல்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலண்டே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் ஆகியோர் நேற்று சென்றனர்.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் ஒரு கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்து, விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி பதிவுகள் ஆராயப்பட்டுள்ளன.
அதில் விமானிகளில் ஒருவர், விபத்துக்கு முன்னதாக விமானி அறையை விட்டு வெளியே சென்றதும், அவர் திரும்ப வந்தபோது விமானி அறை கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வரை ஓயப்போவதில்லை என்று பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே கூறினார்.
விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்ஸ் விமானம் எதற்காக கீழே இறங்கியது என்பது குறித்து எந்த முடிவுக்கும் இப்போதைக்கு வர முடியவில்லை. இப்போதுதான் ஒரு ஒலிப்பதிவு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது அதை ஆய்வு செய்ய வேண்டும்” என பிரான்ஸ் விசாரணை குழு தெரிவித்துள்ளது.
விசாரணையில் தொடர்புடைய இராணுவ உயர் அதிகாரி ஒருவர், “விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி, விமானிகள் இடையே மிகவும் இணக்கமான வகையில் உரையாடல்கள் நடந்ததைத்தான் காட்டுகிறன்ன. விமானிகளில் ஒருவர் வெளியே சென்றுள்ளார். அவர் எதற்காக வெளியே சென்றார் என்பது தெரியவில்லை. ஆனால், விமானத்துக்கு முடிவு ஏற்பட்டபோது, விமானி அறையில் ஒரு விமானிதான் இருந்திருக்கிறார், அவர் கதவைத் திறக்கவில்லை என்பது தெளிவாகின்றது என்றார்.
என்னதான் நடந்தது என்பதை இப்போது உறுதியாக கூற முடியாதபோதும், நடுவானில் விமானம் வெடித்து சிதறி இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தின் 2ஆவது கருப்பு பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
இதற்கிடையே பாரீஸ் நகரில் பிரான்ஸ் அரசின் சட்டத்தரணி பிரைஸ் ரொபின் நேற்று இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி, கழிவறைக்கு சென்றிருக்கிறார். அவரால் மீண்டும் விமானி அறைக்குள் செல்ல முடியாமல் போய்விட்டது. துணை விமானி ஹென்ட்ரூஸ் லூபிட்ஸ் வேண்டுமென்றே எல்ப்ஸ் மலையின் மீது விமானத்தை கீழாக செலுத்தி உள்ளார்.
விமானி, விமானி அறையை விட்டு வெளியேறிய பின்னர் துணை விமானி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விமானி அறையில் நிசப்தம் நிலவி உள்ளது. விமானம் கீழே வந்தபோது அலாரம் ஒலித்திருக்கிறது. கதவை ஓங்கி தட்டும் சத்தமும் கேட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.