இலங்கையில் கடந்த ஆண்டிலும் தொடர்ந்த மனித உரிமை மீறல்கள்! - பிரித்தானியா அறிக்கை
இலங்கையில் கடந்த ஆண்டு சிறியளவிலான முன்னேற்றங்களுடன் மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக, பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தெரி...


இலங்கையில் கடந்த ஆண்டு சிறியளவிலான முன்னேற்றங்களுடன் மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக, பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.2014ம் ஆண்டுக்கான மனித உரிமை நிலை தொடர்பில் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சுதந்திரமான கருத்துக்கூறல், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல், கொலைகள், சித்திரவதைகள், வடக்கின் தமிழர்கள் மீதான கட்டுப்பாடுகள், மனித உரிமை ஆர்வலர்கள் மீது தாக்குதல்கள் என்பன தொடர்ந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதித்துறை பலவீனப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்ட போதும் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்களுடன் இணங்கி செயற்பட இலங்கை அரசாங்கம் மறுத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சர்வதேச நியமங்களை கடைப்பிடிக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் கோரி வருவதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தமது 2014 மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வருடம் இடம்பெற்ற தென்மாகாண மற்றும் மேல்மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் அமைதியாக இடம்பெற்ற போதும் அதற்காக அரசாங்கத்தரப்பு பாரியளவான அரச சொத்துக்களை பயன்படுத்தியதாக பிரித்தானிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது