கோட்டாபாய என்னும் இராணுவ முகாம் ஒன்று முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ளதாக மனுக்களின் பிரதிவாதியான கடற்படை சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். தெஹிவளையில் கடத்தப்பட்டு காணாமல் போன 5 மாணவர்களின் (மூன்று தமிழ் , இரு முஸ்லிம் மாணவர்கள்) சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே கடற்படை சார்பில் ஆஜரான சட்டத்தரணி மேற்படி தெரிவித்துள்ளார்
கோட்டாபய எனும் இரகசிய இராணுவ முகாம், முல்லைத்தீவில் எப்பொழுது நிறுவப்பட்டது என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
தெஹிவளையில் கடத்தப்பட்டு காணாமல் போன 5 மாணவர்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் கிஹான் பிலபிடிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே அவர், தனது வாதத்தை முன்வைத்து மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
தெஹிவளையில் 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி தமிழ் இளைஞர்கள் மூவரும் அவர்களது நண்பர்களான முஸ்லிம் இளைஞர்கள் இருவரும் அவர்கள் பயணம் செய்த வாகனத்தோடு அன்றிரவு 10 மணியளவில் கடத்தப்பட்டனர்.
ஜந்து மாணவர்களின் பெற்றோர்களை மனுதாரர்களாக குறிப்பிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்கள் மேன்முறை¬யீட்டு நீதிமன்றத்தில் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டது.
இந்த மனுக்களில் பிரதிவாதியாக கடற்படையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
அந்த மனுக்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழு¬ம்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் கடந்த 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர்களின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, நீதிமன்றில் ஆஜராகினார்.
அவர், தனது வாதத்தில், அண்மையில் வெளிவந்த செய்திகளில் ‘கோட்டா இரகசிய முகாம்’ ஒன்று உள்ளதாகவும் அந்த முகாமில் 35 குடும்பங்களும் 700 கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும்; குறிப்பிடப்பட்டிருந்தன.
கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள தமது பிள்ளைகள், கோட்டா இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? அல்லது பத்திரிகைச் செய்தியின்படி கொல்லப்பட்டு விட்டார்களா? என்பதில் எது உண்மை என்பதனை விசாரணையை மேற்கொண்டு புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கும் மனுதாரர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிநின்றார்.
அதனையடுத்து கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் கிஹான் பிலபிடிய, பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சென்று உடனடியாக முறைபாட்டை செய்யுமாறு காணாமல் போயுள்ள மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுறித்தினார்.
அத்துடன், மனுதாரர்களின் முறைப்பாட்டை உடனே பதிவு செய்து கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து இந்த விடயங்களை புலன் விசாரணை செய்யுமாறும் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு அறிவுறுத்தினார்.
அது மட்டுமன்றி ‘கோட்டா ரகசிய முகாம்’ உள்ளதா? அப்படியிருந்தால் அந்த முகாம் எங்குள்ளது? கடத்தப்பட்ட மாணவர்கள் கோட்டா இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? அல்லது கொலை செய்யப்பட்டுவிட்டார்களா? என்பவற்றை நீதிமன்றுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும்படியும் நீதிமன்றதால் கட்டளையிடப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே ஆட்கொணர்வு மனுக்கள் மீதான மேலதிக விசாரணை பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்டது. அவ்வேளையில் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி, தனது வாதத்தில்,
கடத்தப்பட்டு காணாமற்போன மாணவர்களின் பெற்றோராகிய மனுதாரர்கள், கடந்த தவணை இந்த நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, 2015ஆம் திகதி பெப்ரவரி 22ஆம் திகதி வெளியான திவயின ஞாயிறு பத்திரிகை செய்தியில், தெஹிவளையில் கடற்படையினரால் கடத்தப்பட்ட நான்கு மாணவர்களும் கொலை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் களனி ஆற்றிலும் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன்; மற்றைய மாணவனான ரஜீவ் நாகநாதன் திருகோணமலைக்கு கடத்திச் செல்லப்பட்டு 2009ஆம் ஆண்டு சித்திரை மாதம் 24ஆம் திகதி கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை பற்றிய முறைப்பாட்டை குற்றப் புலனாய்வுப்பிரிவுக்கு அவர்களது பெற்றோர் செய்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் ‘கோட்டா இரகசிய முகாம்’ உண்டா? அப்படியிருந்தால் எங்கு அந்த முகாம் உள்ளது? கடத்தப்பட்ட மாணவர்கள் கோட்டா இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? அல்லது கொலை செய்யப்பட்டுவிட்டார்களா? என்பவற்றை விசாரித்து நீதிமன்றுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தது.
எனவே, இந்த விவரங்களைப்பற்றிய அறிக்கையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று தாக்கல் செய்கின்றார்களா என்ற விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்கு சிரேஷ்ட சட்டத்தரணி கொண்டுவந்தார்.
இதன்போது மனுக்களின் பிரதிவாதியான கடற்படை சார்பில் ஆஜரான சட்டத்தரணி,
கோட்டாபய எனும் இராணுவ முகாம் ஒன்று முல்லைத்தீவில்; அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, கோட்டபாய என்ற முகாம் எப்பொழுது அமைக்கப்பட்டது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பெயரிலா அது அமைக்கப்பட்டுள்ளது என வினவினார்.
இந்த முகாம் முன்னாள் பாதுகாப்புச் செயளாளரின் பெயரில் அமைக்கப்படவில்லையெனவும் கோட்டாபய என்பது, இந்த நாட்டை ஆண்ட ஓர் அரசனது பெயர் எனவும் அந்த அரசனது பெயரில் முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட இந்த முகாம் ‘இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாகவும் கடற்படையின் சார்பில் ஆஜராக சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
குறுக்கிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, கோட்டாபய என்ற பெயரில் ஓர் இராணுவ முகாம் நாட்டில் இருக்கின்றதா என்ற சந்தேகம் இந்த நீதிமன்றுக்கு மட்டுமல்ல இந்த நாட்டின் மக்களுக்கும் இருந்தது.
அரசனின் பெயரா அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயசலாளரின் பெயரா என்பதல்ல பிரச்சினை, கோட்டாபய என்ற பெயரில் ஓர் இராணுவ முகாம் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
ஆகையால், கடத்தப்பட்டு காணாமற்போன மாணவர்கள் இந்த முகாமில் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்பதனை விசாரணை செய்து, நீதிமன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு தனது வாதத்தை முன்வைத்தார்.
காணாமற்போன மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா என்பதனை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இந்த வழக்கை ஏப்ரல் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.