முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் தனிப்பட்ட குரோதம் எதுவும் கிடையாது என முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவி...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் தனிப்பட்ட குரோதம் எதுவும் கிடையாது என முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்கு பாரியளவில் பங்களிப்பு செய்துள்ளார். அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் சிறு சிறு முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு.
எனினும், தனிப்பட்ட ரீதியான குரோதம் எதுவும் இல்லை. சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிகா ஆகியோரை இணைத்துக் கொண்டமைக்காக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு நன்றி சொல்ல வேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவேன், நான் மட்டுமல்ல எனது மகனும் போட்டியிடுவார். ஊழல் மோசடிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்பு மனு கிடைக்காது.எனக்கு அவ்வாறான எந்தப் பிரச்சினையும் கிடையாது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்காமை நியாயமானதே. சந்திரிகாவை கட்சியில் இணைத்துக் கொள்வதன் மூலம் கட்சியின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமையும் என எஸ்.பி. திஸாநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது கண்டியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் வைத்து சந்திரிகாவை நிர்வாணமாக வீதியில் அடித்து துரத்த வேண்டுமென எஸ்.பி. திஸாநாயக்க ஆவேசமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.