தேசிய ஒற்றுமையின் சின்னம் தேசியக்கொடியா? 19வது திருத்தமா?
9வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் இன்று உயர்நீதிமன்றத்தில் இறுதியாக்கல் விசாரணைகள் இடம்பெற்றன. இதன்போது இலங்கையின் சட்டமா அதிபர் கு...


இதன்போது இலங்கையின் சட்டமா அதிபர் குறித்த 19வது திருத்தம் தொடர்பில் தமது கருத்தை முன்வைத்தார்.
குறித்த திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பின்றி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட முடியும் என்று பரிந்துரையை அவர் முன்வைத்தார்.
இதன்போது குறுக்கிட்ட விசாரணைக்குழுவின் தலைவரும் பிரதம நீதியரசருமான கே.ஸ்ரீபவன், 19வது திருத்தம் இலங்கையின் தேசிய ஒற்றுமையின் சின்னமாக திகழ்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமையை சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் தேசியக்கொடியே தேசிய ஒற்றுமையின் சின்னமாக தற்போது விளங்குகிறது.
எனில் 19வது சரத்து தேசிய ஒற்றுமையின் சின்னம் என்று ஜனாதிபதி கூறியிருக்கும் முரண்பாட்டு கருத்து தொடர்பில் சட்டமா அதிபர் கவனம் செலுத்தவேண்டும் என்று பிரதம நீதியரசர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, எதிர்வரும் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் 19வது அரசியல் அமைப்பு சீர் திருத்தம் தொடர்பான விவாதம் ஒன்றை நடத்துவதற்காக நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையில், இன்று முற்பகல், விசேட கலந்துரையாடல் ஒன்று நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய அவர் 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு நாளை மறுதினம் தம்மிடம் கிடைக்கப்பெறும் என தெரிவித்தார்.
உத்தேச 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த மாதம் 24ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த சட்டமூலம் தொடர்பில் 19 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதில் ஐந்து மனுக்கள் சட்ட மூலத்திற்கு ஆதரவாகவும், 14 மனுக்கள் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.