இனவாத பிரசாரங்களின் மூலம் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சி! – விக்கிரமபாகு குற்றச்சாட்டு
நாடு நல்லதொரு ஆரோக்கியமான நிலையில் பயணிக்கும் போது இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கல...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_420.html

நாடு நல்லதொரு ஆரோக்கியமான நிலையில் பயணிக்கும் போது இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.இந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் குறைந்தது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த எல்.எல்.ஆர்.சி என்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நிறுவப்பட்டது. எனவே இது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என அவரினால் கூற முடியாது.நாம் அதனை நடைமுறைப்படுத்தவேண்டும். அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லையாயினும் தற்போது சில பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதில் காணி விடயத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. சில இடங்களில் காணிகளை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி உத்திரவிட்டுள்ள போதிலும், காணிகள் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தான் அந்த இடத்திற்கு பலவந்தமாக சென்று அந்த காணிகளைப் பெற்றுக் கொள்ளப் போவதாக கூறினார். அப்பொழுது நான் என்னையும் அழைத்துச் செல்லுங்கள் நானும் வருகின்றேன் எனக் கூறினேன். நான் மட்டுமல்ல ஜனாதிபதியும் அந்த இடத்திற்கு செல்லவேண்டும்.ஏனெனில் ஒரு ஜனாதிபதி உத்தரவிட்டும் அது செயற்படுத்தப்படவில்லையாயின் அதில் அவருக்கும் பொறுப்பு இருக்கின்றது.
இவ்வாறு நாம் புரிந்துணர்வுடன் செயற்படும் ஒரு காலம் மலர்ந்துள்ளது. அன்று இவ்வாறு இருக்கவில்லை. ஒருவருக்கு தமிழ் பெயர் என்றால் அவர் மேலிருந்து கீழ் வரை சோதனையிடப்படுவதுடன், காலை, பகல் உண்ட உணவுகளையும் கூறவேண்டிய நிலை இருந்தது. இன்று அவ்வாறு இல்லை. நிலைமை மாறியுள்ளது. யாழப்பாணத்தின் நிலைமை முற்றாக மாறியுள்ளது. அங்கிருந்த இராணுவத்தினர் படிப்படியாக அங்கிருந்து அகற்றப்படுகின்றனர். இன்னும் பல இராணுவத்தினர் அகற்றப்படவுள்ளனர்.
நாடு இவ்வாறான ஒரு பாதையில் பயணிக்கும் போது, எம்மீது இனவாத சேறுபூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நாட்டிலே மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இது ஆரோக்கியமானதல்ல’ என்றும் கூறினார்.

