ஓமந்தை சோதனைச் சாவடி காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை
தாயகத்தின் பெரும்பகுதியான மக்களின் நிலம் சிறிலங்கா இராணுவத்தினரால் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று ...
https://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_19.html
தாயகத்தின் பெரும்பகுதியான மக்களின் நிலம் சிறிலங்கா இராணுவத்தினரால் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் ஓமந்தைப் பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டுக்காக கையப்படுத்திய நிலங்களை விடுவித்து தருமாறு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினரால் 1997 ஆம் ஆண்டு அபகரித்த 20 ஏக்கர் காணியையும் மீளக் கையளிக்க, மாவட்ட அரச அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த பகுதி காணி உரிமையாளர்களால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் கடந்த 1997 ஆம் அண்டு பங்குனி மாதம் முதல் இப்பகுதியில் வசித்த 14 குடும்பங்களிற்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலப்பகுதி வவுனியா, மன்னார் மாவட்ட முன்னாள் காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ந. திருஞானசம்பந்தரின் அறிவித்தலின் பெயரில் சுவீகரிக்கப்பட்டதாக அறிவித்தல் விடப்பட்டது.
இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட இக்காணிகளை உரிமை கோர எவரும் இல்லையெனவும் விபரிக்கப்பட்டிருந்ததோடு இக்காணி தேவைப்படும் காரணமாக உள்நுழைவு வெளியகழ்வு நிலையம் அமைப்பு எனக் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும் இதில் குறிப்பிடப்பட்டது போன்று இக் காணியின் உரிமையாளர்கள் இல்லையென்பது தவறு எனவும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்ந்த போதும் குறித்த 14 குடும்பங்களிடமும் இந்த நிலங்களின் அனுமதிப்பத்திரமும் உள்ளமையினால் இந்நிலங்களை மீட்டுத்தருமாறு கடந்த 2013 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்த போதும், எதுவித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது ஓமந்தை சோதனைச்சாவடியின் நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் அதனை முழுமையாகவோ பகுதி அளவிலோ விடுவித்து அப்பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் உதவ மாவட்ட அரச அதிபரும் பிரதேச செயலாளரும் ஆக்கபூர்வமான நடவடிக்கையெடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

