உக்ரைனில் கைதிகள் பரிமாற்றம்!:ரஷ்யா மீது மேலதிக பொருளாதாரத் தடை எச்சரிக்கை!

உக்ரைனில் கடந்த 12 ஆம் திகதி ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருதரப்பாலும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் எட்டப் பட்ட பின்னரும் கிழக்கு உக்ரைனில...



உக்ரைனில் கடந்த 12 ஆம் திகதி ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருதரப்பாலும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் எட்டப் பட்ட பின்னரும் கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் அத்துமீறல்களும் ஆத்திரமுட்டும் நடவடிக்கைகளும் தொடர்வதால் ரஷ்யா மீது மேலதிகப் பொருளாதாரத் தடை நிச்சயம் விதிக்கப் படும் என சனிக்கிழமை மிகக் கடுமையான வார்த்தைகளால் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.

லண்டனில் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலிப் ஹம்மௌன்ட் உடன் இணைந்து பேசும் போதே கெர்ரி இவ்வாறு தெரிவித்தார். மேலும் உக்ரைன் சமாதான முயற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நிலையிலும் ரஷ்யா அங்கு நிலத்தைக் கையகப் படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்கின்றது எனவும் கெர்ரி சாடினார். ஒரு நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மதியாது ரஷ்யா மோசமான நடத்தையை மேலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் நாம் தொடர்ந்தும் உட்கார்ந்து நிலமையைச் சரி செய்வது குறித்துப் பேசிக் கொண்டிருக்க முடியாது! என்று ஆத்திரம் தொனிக்கக் கூறிய கெர்ரி 2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் உலகளாவிய சமூகம் இந்தளவுக்கு இறங்கி வந்து ரஷ்யாவின் அத்துமீறல்களைப் பொறுத்துக் கொண்டிருந்தது கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் அளிக்கவில்லை என்றும் எல்லையில் படைகளை அனுப்பவில்லை என்றும் ரஷ்யா திரும்பத் திரும்ப பொய்யுரைத்து வருவதாகவும், கண்காணிப்புத் தொழிநுட்பமும், செய்மதிகளும் நிறைந்துள்ள இன்றைய கால கட்டத்தில் ரஷ்யா எந்த ஒரு ரகசியத்தையும் மறைத்து வைத்திருக்க முடியாது எனவும் கெர்ரி கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தைக் கைப்பற்றிய ரஷ்யா உக்ரைனில் எந்தவொரு நேரடித் தலையிடலையும் மறுத்து வருகின்றது. மேலும் உக்ரைனின் எல்லைகளில் நிறுத்தப் பட்டுள்ள ரஷ்யப் படைகள் தமது விடுமுறைக் காலத்தில் தன்னார்வ அடிப்படையில் போர்ப் பயிற்சியை மேற்கொண்டு வருபவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. உக்ரைனில் சமீபத்தில் டெபால்ட்சேவே நகர முற்றுகையின் போது ஜனவரி 18 முதல் பெப்ரவரி 18 வரை சுமார் 179 உக்ரைன் துருப்புக்கள் கொல்லப் பட்டிருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யுத்த நிறுத்த ஒப்பந்தம் எட்டப் பட்ட பின்னரும் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க நகரான டெபால்ட்சேவே மீதான முற்றுகையைக் கைவிடவில்லை. எனினும் புதன்கிழமை உக்ரைன் படைகள் பின்வாங்கியதால் முற்றுகை ஓர் முடிவுக்கு வந்தது. ஆயினும் இந்தத் தாக்குதலின் போது 110 உக்ரைன் துருப்புகள் கைப்பற்றப் பட்டதுடன் 81 பேர் காணாமற் போனதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் பின்னர் அதாவது நேற்று சனிக்கிழமை மாலை ரஷ்யா சற்று அடிபணிந்து தான் கைப்பற்றியிருந்த 139 உக்ரைன் துருப்புக்களை 52 ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்குப் பதிலாக விடுவித்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் விவகாரத்தில் இதுவரை 5700 பேர் கொல்லப் பட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளதாக ஐ.நா இன் மனித உரிமைகள் பிரிவின் கணிப்பு தெரிவிக்கின்றது.

Related

உலகம் 1826625998711407392

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item