ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டு பாதிரியார்

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ள பாதிரியார் அலெக்ஸ் பிரேம்குமார் இன்றும் இந்திய தலைநகர் புதுடில்லியில் தங்கவைக்கப்பட்டுள்ளார்...


ரோமன் கத்தோலிக்க பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார்
                         ரோமன் கத்தோலிக்க பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார்

அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் 8 மாதங்களுக்கு முன்பாக சிறைப் பிடிக்கப்பட்டிருந்த ரோமன் கத்தோலிக்க பாதிரியார் அலெக்ஸ் பிரேம்குமார் நேற்று ஞாயிற்றுகிழமை மாலை நாடு திரும்பினார். உறவினர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட பின், புதுடில்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அவர், தங்கவைக்கபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டு மேற்கு ஆப்கானிஸ்தான் கடத்தப்பட்ட பாதிரியார் அலெக்ஸ் பிரேம் குமார், முன்னதாக அகதிகளுக்கான சேவைகளை வழங்கும் பன்னாட்டு அரசுசாரா நிறுவனம் ஒன்றிற்காக பணிபுரிந்து வந்துள்ளார்.
பொதுவாக இது போன்ற விடுவிக்கப்பட்டவர்களை உடனடியாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப அனுப்பத்தான் அரசு தீவிரம் காட்டும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இரண்டாவது நாளிலும் அவர் புதுடில்லியில் தான் தங்கியுள்ளார். இருந்தப்போதும் இது வழக்கமான நடைமுறை தான் என்று வெளியுறவுத்துறை வட்டார செய்திகள் கூறுகின்றன.
டில்லி வந்திறங்கிய பாதிரியார் அலெக்ஸ் பிரேம் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பலரது பிரார்த்தனையின் விளைவாகவே தான் உயிரோடு பிழைக்க முடிந்தது என்றும், இந்திய பிரதமரின் தனிப்பட்ட அக்கறையின் காரணத்தால் விரைவாக நாடு திரும்ப முடிந்தது என்றும் கூறினார். இதற்காக அவர் அவரது நன்றியையும் அப்போது கூறினார்.
கடந்த 8 மாதக்காலமாக பாதிரியார் அலெக்ஸ் பிரேம் குமாரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார்கள். இதன் விளைவாக இவரை மீட்கும் முயற்சியை இந்திய அரசு பல விதமாக மேற்கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய போது, இந்திய பிரதமர் உள்ளிட்டோர் தலையீட்டதன் விளைவாக இது சாத்தியமாகியதாக கூறினார்.
இந்தியாவில் மதச் சுதந்திரத்தை பாதுகாப்பதாகவும், எந்தவொரு மதக்குழுவும் மற்றைய மதத்தின் மீது வெறுப்புணர்வை தூண்டுவதைத் தனது அரசாங்கம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் மோடி உறுதியளித்த ஒரு வாரக் காலத்திற்குள் இந்த மீட்பு பணி நடைபெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
குறிப்பாக கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 ஆம் தேதியன்று தான் வாஜ்பாயின் பிறந்த தினம் என்பதால், அதை நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு எடுத்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுவும் டில்லி சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சந்தித்த தோல்விக்கு காரணம் என கூறப்பட்டு வந்த சூழலில் தான், சிறுபான்மையினருக்கு ஆதரவான குரலை மோடி ஒலித்தார். தற்போது பிரதமர் உள்ளிட்டோரின் கடும் முயற்சிக்கு பிறகு ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மீட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related

உலகம் 1996102141642174816

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item