விரைவில் அமெரிக்காவிலும் கியூபாவிலும் திறக்கப் படவுள்ள தூதரகங்கள்!:ஒபாமா அறிவிப்பு
50 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கா கியூபா இடையேயான உறவு மிகவும் வலுப்படவுள்ளதாகவும் விரைவில் கியூபத் தலைநகர் ஹவானாவில் அமெரிக்கத் தூதரகமும் ...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_88.html
50 வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கா கியூபா இடையேயான உறவு மிகவும் வலுப்படவுள்ளதாகவும் விரைவில் கியூபத் தலைநகர் ஹவானாவில் அமெரிக்கத் தூதரகமும் வாஷிங்டனில் கியூப தூதரகமும் திறக்கப் படவுள்ளதாக அமெரிக்கா அதிபர் ஒபாமா இன்று புதன்கிழமை வெள்ளை மாளிகையில் ஊடக அறிவிப்பின் போது தெரிவித்துள்ளார்.
இன்று ஒபாமா வெள்ளை மாளிகையின் றோஸ் கார்டெனில் இருந்து ஊடகங்களுக்காக உரையாற்றும் போது, '1961 ஆம் ஆண்டு அமெரிக்காவானது தனது தூதரகத்தைக் கியூபாவில் மூடிய போது அத்தூதரகம் மறுபடி திறக்கப் பட சுமார் அரை நூற்றாண்டு தேவைப்படும் என்பதை நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை' என்று தெரிவித்திருந்தார். மேலும் இன்று புதன்கிழமை காலை கியூபத் தலைநகர் ஹவானாவில் அமெரிக்க அதிகாரி ஒருவர் இரு நாட்டு உறவையும் மேம்படுத்துவது தொடர்பில் அதிபர் ஒபாமாவிடம் இருந்து கியூப அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுக்கு ஓர் குறிப்பை வழங்கியிருந்தார். 54 வருடங்களாக உடைந்திருந்த அமெரிக்க உறவைப் புதுப்பிப்பது தொடர்பாக ஹவானாவின் வெளியுறவு அமைச்சு வளாகத்தில் நடந்த சிறிய வைபவத்தில் அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுக்கு அமெரிக்க உறவுகளைப் புதுப்பிக்கும் துறைக்கான பிரதான அதிகாரி ஜெஃப்ரேய் டெலௌரென்டிஸ் இந்தக் குறிப்பை வழங்கினார்.
பதிலுக்கு ராவுல் காஸ்ட்ரோவும் ஒபாமாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் எமது இரு தேசங்களும் எமது மக்களின் உரிமைகளுக்கான சமத்துவம் மற்றும் அவர்களது சுதந்திர சிந்தனை அடிப்படையில் நட்பைக் கட்டியெழுப்புவதே எமக்கு இப்போது தேவைப் படும் விடயம் எனக் குறிப்பிடப் பட்டிருந்ததாக செய்திகள் கூறியுள்ளன. ஏற்கனவே அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபா நீக்கப் பட்டுள்ள நிலையில் ஜூலை 20 ஆம் திகதி வாஷிங்டனில் கியூபத் தூதரகம் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் எனக் கியூப வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. மறுபுறம் இந்த வருடம் கோடைக் காலத்தில் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி கியூபாவில் அமெரிக்கத் தூதரகத்தைத் திறந்து வைப்பதற்காக செல்லவுள்ளார். 1945 ஆம் ஆண்டுக்குப் பின் 70 வருடங்கள் கழித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் உள்ளவர் கியூபாவுக்கு செல்லவுள்ளது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

