இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக கபில விஜேகுணவர்தன நியமனம்
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக முன்னாள் டெஸ்ட் வீரரான கபில விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நியமிக்கப்பட்ட நான்கு பேர் ...
https://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_692.html
இன்று நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட தெரிவுக்குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதி கிடைத்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனத் ஜயசூரிய தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் இராஜினாமா செய்தது.
அதற்கமைய, இன்று பெயரிடப்பட்ட புதிய தெரிவுக்குழுவிற்கு கபில விஜேகுணவர்தன தலைவராக நியமிக்கப்பட்டார்.
அமல் டி சில்வா, பிரெண்டன் குருப்பு மற்றும் ஹேமந்த விக்ரமரத்ன ஆகியோர் தெரிவுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மிதவேகப்பந்துவீச்சாளரான கபில விஜேகுணவர்தன 2 டெஸ்ட் போட்டிகளிலும், 26 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
பிரெண்டன் குருப்பு 4 டெஸ்ட் போட்டிகளிலும், 54 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரராக பிரகாசித்துள்ளார்.
இடக்கை சுழல்பந்து வீச்சாளரான ஹேமந்த விக்ரமரத்ன 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்த வருடம் 4 தொடர்களில் பங்குபற்றவுள்ளதுடன் அதன் முதல் அம்சமாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது.
(newsfirst)

