வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. உலக கோப்பை லீக் கிர...
https://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_424.html
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
உலக கோப்பை லீக் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் வங்காளதேசமும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய வங்காளதேச அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகம்மதுல்லா ஆட்டமிழக்காமல் 128 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் அபாயகரமான பேட்ஸ்மேன் மெக்கல்லம் 8 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் குப்தில் சிறப்பாக ஆடி சதமடித்தார். 105 ரன்கள் எடுத்த குப்தில் சகிப் உல் ஹாசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
முதல் முறையாக உலக கோப்பை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள வங்காளதேச அணி, நடப்பு உலக கோப்பை தொடரில் தோல்வியே அடையாத நியூசிலாந்து அணியை வெற்றி பெறும் முனைப்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான இடைவெளியில் டெய்லர் (56), எல்லியட்(39), என நியூசிலாந்து அணி வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் ஒருகட்டத்தில் ஆட்டம் வங்காளதேச அணிக்கு சாதகமாக செல்வது போல் இருந்தது. இருப்பினும் கோரி ஆண்டர்சன்(39) அதிரடி காட்டியதால் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து வங்காள தேசத்தை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்டநாயகன் விருதை நியூசிலாந்து வீரர் குப்தில் பெற்றார்.

