கோத்தாவிடம் மீண்டும் விசாரணை
ஏவன் கார்ட் மற்றும் ரக்னா லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதி வழங்கியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் ச...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_350.html

ஏவன் கார்ட் மற்றும் ரக்னா லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதி வழங்கியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் போரில் மாத்திரம் பயன்படுத்தக் கூடியவை என்பதால், இந்த ஆயுதங்களை தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பயன்படுத்த கோத்தபாய ராஜபக்சவே அனுமதியை வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கூறியிருந்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது சம்பந்தமாக ஏற்கனவே கோத்தபாய ராஜபக்சவிடம் இரு முறை விசாரணை நடத்தியிருந்தனர். ஆயுதங்கள் வழங்க அனுமதி வழங்கியமை குறித்து அவர் தகவல் தந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் காலி கடற்படை முகாமில் இருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஆகிய தொடர்பில் நடத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளில் சர்வதேச சமுத்திர சட்டங்களின் கட்டளைச் சட்டங்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டன. நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டமை, அவற்றை வழங்குவதற்கான உரிமை, ஆயுத களஞ்சியத்தை வைத்திருந்தமை மற்றும் ஆயுத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டமை ஆகிய குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள் தற்போது முடிவடைந்துள்ளதுடன் விசாரணைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளை பெறுவதற்காக விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

