ராஜபக்சவை ஓரங்கட்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி?
ராஜபக்ஷ குடும்பத்தை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் முயற்சிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிய வ...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_293.html
ராஜபக்ஷ குடும்பத்தை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் முயற்சிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிய வருகின்றது.
இதனை அறிந்துகொண்டமையினாலேயே மகிந்த ராஜபக்ஷவை உள்வாங்கி மற்றொரு கூட்டணியை உருவாக்கும் பிரயத்தனங்களில் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்பன் பில உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திரக்கட்சியில் மகிந்தராஜபக்ஷவுக்கோ அவரது குடும்பத்தவர்களுக்கோ எதிர்காலத்தில் எந்தவொரு பதவியையும் வழங்குவதற்கு இடமளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அண்மைக்காலமாக தெரிவித்து வருகின்றார்.
சுதந்திரக்கட்சியை அழிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும், எதிர்காலத்தில் தனிப்பெரும் பலம்கொண்ட கட்சியாக அதனை கட்டியெழுப்புப் போவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
எதிர்வரக்கூடிய தேர்தலில் சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்தனியே களமிறங்கி அவை பெற்றுக்கொள்ளும் பெரும்பான்மை பலத்துடன் தேசிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபூண்டுள்ளார். ஊழல், மோசடிகள், முறைகேடுகளில் தொடர்புபட்ட எவரும் அடுத்தத் தேர்தலில் வேட்பாளர்களாக நியமிக்கப்படமாட்டார்கள் எனவும், அவர்களை கட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவிக்கின்றார்.
முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் கடந்தவாரம் இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட்ட ஊழல், மோசடிகாரருக்கு கட்சியில் இடம் கிடையாது என அவர் கடுமையாக தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறான நிலையிலேயே முன்னாள் அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன் பில ஆகியோர் மகரகமவில் சந்தித்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலீடுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்தராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தாவிட்டால் தனிக்கூட்டணி மூலம் அவரை பிரதமர் வேட்பாளராக புதிய கூட்டணி நிறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு 57 இலட்சத்து 68 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருப்பதால், இந்த வாக்கு வங்கியை வைத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கான வியூகத்தை அமைத்துச் செயற்பட இந்தப் புதிய கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

