மைத்ரி தலைமையில் சுதந்திர கட்சி: 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைவு!
ஓய்வெடுக்கச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திரும்ப வந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் வடமேல் மா...
ஓய்வெடுக்கச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திரும்ப வந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் வடமேல் மாகாணசபை முதல்வர் தயாசிறி ஜயசேகர உட்பட 20 பாராளுமன்ற உறுப்பினர்களடங்கிய குழு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிர்வாகத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் மீள நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது.
கட்சியின் செயலாளராக துமிந்த திசாநாயக்கவும் தேசிய அமைப்பாளராக பா.உ ஜனக பண்டாரவும் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை மறுபுறத்தில் ஜனாதிபதி தலைமையில் சுதந்திர கட்சி மத்திய குழு கூடிக் கலந்துரையாடிக்கொண்டிருந்தது.
மைத்ரி தலைமையில் ஒன்று சேர்ந்துள்ள அணியில் சரத் அமுனுகம, அதாவுட செனவிரத்ன, ரெஜினோல்ட் குரே, டி.பி. ஏக்கநநாயக்க மற்றும் எஸ்.பி. நாவின்ன, விஜயமுனி சொய்சா, விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), ஆகியோரோடு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்ட வட மேல் மாகாண முதல்வர் தயாசிரி ஜயசேகரவும் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இவ்வாறான பாரிய கட்சித் தாவல் மற்றும் அரசியல் நிலை மாற்றங்கள் ஏற்படுவது இதுவே முதற்தடவையெனவும் இது புதிய அனுபவம் எனவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

